காரைக்கால் கடற்கரையில் ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ கைலாசநாதர் தீர்த்தவாரி
காரைக்கால், ஜூலை 18: ஆடி அமாவாசையையொட்டி காரைக்கால் கடல் கரையில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ரகுநாதப் பெருமாள் ஆகிய சுவாமிகள்
காரைக்கால், ஜூலை 18: ஆடி அமாவாசையையொட்டி காரைக்கால் கடல் கரையில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள், ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ரகுநாதப் பெருமாள் ஆகிய சுவாமிகள் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கடலில் நீராடி வழிபாடு நடத்தினர்.
ஆண்டுதோறும் ஆடிமாதம் வரக்கூடிய அமாவாசை நாளில் சமுத்திர தீர்த்தவாரியில் சுவாமிகள் ஈடுபடுவதும், பக்தர்கள் கடலில் நீராடுவதும் மிகுந்த விசேஷமாக நடத்தப்படுகிறது. சமுத்திரத்தில் பெருமாள் இறங்கி தீர்த்தவாரி செய்வது என்பது அரிதான ஒன்றெனவும் வைணவ சமயத்தார் கூறுகின்றனர்.
காரைக்காலில் சுமார் 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் சமுத்திர தீர்த்தவாரி, கடந்த 2 ஆண்டுகளாக கடலுக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளச் செய்யப்படுகிறது. நிகழாண்டு 3வது ஆண்டாக காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஒரு பல்லக்கிலும், ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் ஒரு பல்லக்கிலும் புதன்கிழமை(இன்று) அதிகாலை காரைக்கால் கடற்கரைக்கு எழுந்தருளினர்.
கடலுக்குள் இறங்கி சுவாமிகள் பக்தர்களுக்கு தீர்த்தவாரி செய்தது. தொடர்ந்து அஸ்திரதேவர், செல்வர் ஆகியோர் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு பிறகு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் நீராடி சுவாமிகளை வழிபட்டனர்.
தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் வீதியுலாவாக கோயிலுக்கு சென்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் அர்ச்னை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ ரகுநாதப் பெருமாள் முதல் முறையாக அங்குள்ள கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்தவாரி செய்யப்பட்டது. பக்தர்கள் கடலில் நீராடினர். பிறகு கோவிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்னை செய்து வழிபாடு நடத்தினர். கோவிலில் மூலவருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.