மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி: பாடல் - 2
இன்றைய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல், இறைவன், உயிர்களின் சாதல் - பிறத்தல் துன்பத்தை நீக்கியருளும் பாங்கினை வாழ்த்துகிறது.
(திரோதான சுத்தி)
அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் யெழவெழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந்
திரணிரை மறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி யெழுந்தருள் ளாயே!
விளக்கம்: இன்றைய திருப்பள்ளியெழுச்சித் திருப்பாடல், இறைவன், உயிர்களின் சாதல் - பிறத்தல் துன்பத்தை நீக்கியருளும் பாங்கினை வாழ்த்துகிறது.
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! திருவருட் செல்வத்தை அருள எழுந்தருளும் பேரின்ப மலையே! அலைகடலே! செங்கதிரோன் இந்திரன் திசையை - கீழ்த்திசையை அணுகினான். இருள் அகன்றது; உதய ஒளி எங்கும் பரவிற்று. நின் திருமுகத்தின் அருளைப்போலக் கதிரவன் ஒலி மேலுயர்ந்து வரவரத் தாமரைகள் மலர்கின்றன; வண்டுகள் ஒலிக்கின்றன. பள்ளியெழுந்தருள்க! திருவருளைத் தந்திடுக!
விளக்கவுரை: தவத்திரு குன்றக்குடி அடிகளார்