பழனியில் கஞ்சிக்கலையம் ஊர்வலம்
பழனியில் ஆடிவெள்ளியை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கஞ்சிக்கலையம் ஊர்வலம் நடைபெற்றது.
பழனியில் ஆடிவெள்ளியை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கஞ்சிக்கலையம் ஊர்வலம் நடைபெற்றது.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடிமாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பழனியில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலையம் ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் துவங்கிய ஊர்வலம் மாரியம்மன் கோயில், கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பழனி லட்சுமிபுரத்தில் உள்ள பராசக்தி மன்றத்திற்கு வந்து நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள்உடை அணிந்து கஞ்சிக்கலையமேந்தி சென்றனர்.
லேசான மழை பெய்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் ஊர்வலம் சென்றது. பழைய ஆயக்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு நடுமடத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் அம்பாளுக்கு ஆடிலட்சார்ச்சனை நடத்தப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பழனி ரெயில்நிலையம் அருள்மிகு மாரியம்மன் கோயில், இட்டேரி ரோடு அருள்மிகு காமாட்சிஅம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.