எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேவிபட்டினம் நவபாஷாண கோயில், தற்போது கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது நவபாஷாண தீர்த்தம். கடற்கரை ஒட்டிய பகுதியில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இங்கு பரிகார பூஜை செய்து, தீர்த்தத்தில் நீராடினால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலும் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இங்கு வருவதுண்டு. அதுமட்டுமன்று, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். தினசரி குறைந்தபட்சம் ஐந்து ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை மக்கள் வருகை தருவார்கள். அதிலும், அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடிச் செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகளவில் உள்ளதாலும், கடற்கரை பகுதியில் அதிகப்படியான வெப்பம் நிலவி வருவதாலும் பக்தர்கள் வருகை இல்லாமல் நவபாஷாண கோயில் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.