முகப்பு
ஆன்மிகம்

சும்பன், நிசும்பனை அழித்த தஞ்சாவூர் நிசும்பசூதனி 

திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளால் தஞ்சை நகரில் சோழர்களுடைய ஆட்சி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனிக்காக கோயில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஆறு அடி உயரத்திற்கும் உயரமாக அம்மன் நிசும்பசூதனி காட்சியளிக்கிறாள். அன்னை, தன் கரங்களில் பல படைக்கலன்களைக் கொண்டுள்ளார். தீச்சுடர் போல் கேசம், முகத்தில் உறுதி, அசுரர்களை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம், வலது காதில் பிரேத குண்டலம், இடக்காதில் பெரிய குழை, சதை வற்றிய உடல், திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள், அவற்றைச் சுற்றிலும் கச்சாகக் காணப்படுகின்ற பாம்பு, உடலில் மண்டை ஓடுகள், எட்டுக் கரங்களிலும் ஆயுதங்களைக் கொண்டுள்ள அம்மனின் ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைக் காண்பிக்கிறது. 

அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றப்பட்ட நிலையில் உள்ளது. இச்சிற்பத்தினைப் போன்ற வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. இவளை வடபத்ர காளி என்றும், ராகுகால காளி என்றும் அழைக்கின்றனர்.
 

மத்தியப் பிரதேசத்தில் இதே வடிவில் அன்னை எலும்புருவில் காட்சி அளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சத்ரு சம்காரியாக, வெற்றித்தெய்வமாக காட்சி தருகிறாள் நிசும்பசூதனி.
 
55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2016-, ஜூன் மாதம் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.