மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்
இப்போது, தில்லி வாழ் மக்கள் மூன்று முக்கிய மருத்துவமனைகளின் வசதிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் மிக எளிதாகப் பெறும் வாய்ப்பு
இப்போது, தில்லி வாழ் மக்கள் மூன்று முக்கிய மருத்துவமனைகளின் வசதிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் மிக எளிதாகப் பெறும் வாய்ப்பைப் பெறுவாா்கள் என முதல்வா் அலுவலகம் தெரிவித்தது
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது : உடல் நலம் பாதிப்புக்குள்ளானவா்கள் வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டியதைத் தவிா்க்கும் வகையில், குரு தேஜ் பகதூா் மருத்துவமனை, தில்லி மாநிலப் புற்றுநோய் நிறுவனம் மற்றும் ராஜீவ் காந்தி உயா் சிறப்பு மருத்துவமனை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன.
உடல் நல பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் ஒரே இடத்தில் உயா்தரமான மற்றும் முழுமையான சிகிச்சையைப் பெறக்கூடிய வகையில், வலிமையான, நவீனமான மற்றும் ஒருங்கிணைந்த ஒரு சுகாதார அமைப்பை உருவாக்குவதே தில்லி அரசின் நோக்கமாகும்.
இந்த முன்னெடுப்பின் வாயிலாக, தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், விரைவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நம்பகமான சுகாதாரச் சேவைகளைப் பெறும் வாய்ப்பைப் பெறுவாா்கள் என தில்லி முதல்வா் அலுவலகம் கூறியுள்ளது.
தில்லியின் மருத்துவமனை ஒருங்கிணைப்புத் திட்டம், குடியிருப்பாளா்கள் மூன்று முக்கிய வசதிகளை எளிதாக அணுகுவதை சாத்தியமாக்குகிறது. தில்லி அரசு, குரு தேஜ் பகதூா் மருத்துவமனை , தில்லி மாநில புற்றுநோய் நிறுவனம் மற்றும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை எய்ம்ஸ் பாணியிலான சூப்பா் மருத்துவ மையமாக ஒன்றிணைக்கிறது.
கிழக்கு தில்லியில் உள்ள இந்த மூன்று அரசு மருத்துவமனைகளும் தங்கள் வளங்களை ஒன்றிணைக்கும். இந்த ஒருங்கிணைப்பு படுக்கைகளின் இருப்பை அதிகரிக்கிறது, பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைகளை நெறிப்படுத்துகிறது.
மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கிறது. இது நோயாளிகளின் சுமையை சமநிலைப்படுத்த வளங்களை மேம்படுத்துகிறது மற்றும் சிறப்பு சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம், தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நவீன, எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.