முகப்பு
ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:18 PM
பகிர்:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து காலை 6.30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் என்.சிதம்பரசபாபதி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.

ஜன.9-ம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8.00 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

ஜன.10-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10.00 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

ஜன.11-ம் தேதி சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் எஸ்.கே.பாலகணேச தீட்சிதர், துணைச் செயலாளர் சு.வை.நவமணி தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுகாதாரம் மற்றும் குடிநீர் ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் பி.வி.சுரேந்திரஷா செய்திருந்தார்.                                                                           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.