முகப்பு
திருப்பாவை

திருப்பாவை - பாடல் 6

நாம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும்,

Updated On : 21 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:26 AM

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்று பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்

Advertisement

நாம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும், எவ்வாறு நோன்பு நோற்க வேண்டும் என்றும் முதல் இரண்டு பாடல்களில் விளக்கிய ஆண்டாள், அடுத்த இரண்டு பாடல்களில் நீர்வளம் மிகுந்து விளங்க வேண்டும் என்று வேண்டிய பின்னர், கண்ணனைப் போற்றி வழிபட்டால் நாம் அடையும் பயன்களை குறிப்பிட்டார், இந்த பாடல் தொடங்கி அடுத்த பத்து பாடல்களில், தோழியர்களை திரட்டிக்கொண்டு, ஆயர்பாடி சிறுமியர்கள் நீராடச் செல்லும் காட்சிகளை சித்தரிக்கின்றார். பொழுது விடிந்ததை உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தோழியை எழுப்பும் முயற்சி இங்கே உணர்த்தப்படுகின்றது. புள் = பறவை, பறவைகளின் அரசனாக கருதப்படும் கருடன்; மாயன் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட ஆண்டாள் இந்த பாடலில், அவன் செய்த மாயங்கள் இரண்டினை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

பொழுது விடிந்ததால், பறவைகள் தங்களது கூட்டினை விட்டு, உணவினைத் தேடி வெளியே ஆரவாரத்துடன் புறப்பட்டுச் செல்கின்றன. பறவைகளின் அரசனான கருடனின் தலைவனின் திருக்கோயிலில், சங்குகள் ஒலிக்கும் ஒலி உனது காதினை எட்டவில்லையா, பெண்ணே நீ எழுந்திருப்பாயாக. தாயாக நடித்து நஞ்சு கலந்த பாலினைக் கொடுத்து கொல்ல முயற்சி செய்த பேயான பூதனையின் உயிரினை, பால் உறிஞ்சி குடிப்பது போன்று உறிஞ்சி முடித்தவன் கண்ணன்; யசோதைத் தாய் பாதுகாப்பாக ஒரு வண்டியின் கீழே வைத்தபோது அந்த வண்டியினில் புகுந்து தன்னைக் கொல்ல முயன்ற சகடாசுரனின், உடல் நொறுங்குமாறு அந்த வண்டியினைத் தனது கால்களால் உதைத்தவன் கண்ணன்; இத்தகைய செயல்களைச் செய்த மாயக்கண்ணன், பாற்கடலில் பாம்பணையில் துயில்கொள்ளும் திருமால் என்பதை உணர்ந்த முனிவர்களும் யோகிகளும் அரி, அரி என்று அவனைத் துதிக்கும் குரல்களைக் கேட்கும் எங்களது மனம் மிகவும் குளிர்ந்து காணப்படுகின்றது. நீயும் உனது துயில் கலைந்து, எழுந்து அந்த துதிகளைக் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.