திருப்பாவை - பாடல் 11
பசுக் கூட்டங்களை உடைய இடையர் குலத்தில்
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழிய சென்றுச் செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
பாடியவர் - பவ்யா ஹரி
விளக்கம்
Advertisement
நந்தகோபரைப் போன்று செல்வச் செழிப்பு உடைய குடும்பத்தில் பிறந்த சிறுமியை எழுப்ப முயற்சி செய்த போது பாடிய பாடலாக கருதப்படுகின்றது. செல்வாக்கு மிகுந்த குடியில் பிறந்தவன் என்பதால் அத்தகைய குடியில் பிறந்தவர்களுக்கு இயல்பாக இருக்கும் செருக்கு இவளுக்கும் இருந்தது போலும். அதனால்தான் மற்ற சிறுமியர்கள் கண்ணனைச் சென்று காண்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கையில், இவள் மட்டும் தான் ஏன் கண்ணனைக் காணச் செல்ல வேண்டும்: வேண்டுமானால் கண்ணன் தான் இருக்கும் இடத்திற்கு வரட்டுமே என்ற எண்ணத்தில் மூழ்கி இருந்தாள் போலும். மற்ற பெண்களும் இவளது நிலை கருதி செல்வச்சீமாட்டி என்று அழைப்பதை நாம் காணலாம்.
பொழிப்புரை
கன்றுகளை உடைய பசுக் கூட்டங்களை உடைய இடையர் குலத்தில் வந்தவரும், பகைவர்களின் வலிமை அழியும்படி அவர்களை போரில் வெல்லும் திறமை கொண்டவரும், குற்றங்கள் ஏதும் இல்லாதவரும் ஆகிய தலைவனின் மகளே, பொற்கொடி போன்று அழகிய தோற்றம் உடையவளே. புற்றில் வாழும் பாம்பின் புடைத்து நிற்கும் படத்தினைப் போன்று அழகான மார்பகத்தை உடையவளே, காட்டில் திரியும் அழகிய மயிலின் சாயலை உடையவளே, செல்வம் மிகுந்த குடியில் பிறந்த பெண்ணே உனது உறவினராகிய தோழிகள் அனைவரும் வந்து உந்தன் வீட்டு முற்றத்தினில் நின்றவாறு கருமேகம் போன்ற நிறத்தினை உடைய கண்ணனின் திருநாமங்களைச் சொல்லியவாறு பாடல்கள் பாடுகின்றனர். ஆனால் நீயோ சிறிதும் அசையாமலும் பேசாமலும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றாய். இவ்வாறு உறக்கத்தில் இருப்பதன் மூலம் நீ எங்களுக்கு என்ன உணர்த்துகின்றாய், எங்களுக்கு ஏதும் புரியவில்லை.