பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால் போக்கிலன்
வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம்
உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான்
பள்ளி எழுந்தருளாயே.
பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்
ஏதங்கள் = குற்றங்கள். சீதங்கொள் = குளிர்ந்த தண்ணீரை உடைய. போக்கு வரவு = பிறப்பு மற்றும் இறப்பு. புலவோர் = புலவர்கள், அறிஞர்கள்.
பொருள்
ஐந்து பூதங்களிலும் நிலையாக நிற்கின்றாய் என்றும், பிறப்பு மற்றும் இறப்பினைக் கடந்தவன் என்றும் உனது பெருமைகளை அறிஞர்கள் பாடல்களாக பாடுவதையும் ஆடுவதையும் அறிவோம். ஆனால் உன்னை முழுவதும் நேரில் கண்டு அறிந்தவர்களை இதுவரை நாங்கள் கேட்டதில்லை. குளிர்ந்த தண்ணீர் தங்கும் வயல்களை உடைய திருப்பெருந்துறை தலத்தின் அரசே, எங்களது சிந்தைனுக்கு மிகவும் அரியவனே, எங்களின் குற்றங்களைக் களைந்து எங்கள் முன் வந்து நின்று காட்சி கொடுத்து அருள்புரிவதற்காக இறைவனே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்.