திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவத்துக்கான பந்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கன்னி லக்கனத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்மந்த விநாயகர் சந்நிதி எதிரே பந்தக்கால் முகூர்த்தப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, கோயில் அதிகாரிகள், பக்தர்கள், உபயதாரர்கள் இணைந்து பந்தக்கால் நட்டனர். பின்னர், பந்தக்காலுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
10 நாள் சித்திரை வசந்த உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு வேளைகளில் உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது.
வரும் மே 8-ஆம் தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு ஸ்ரீகோபால விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மன்மத தகனம் வரும் மே 8-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே நடைபெறுகிறது. இந்த நிகழ்வுடன் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.