ஆடிப்பெருக்கு விழா இன்று காவிரி கரையோர பகுதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு (ஆடி 18). ஆடிப்பெருக்கு பண்டிகை காவிரி கரையோரம் உள்ள பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.
ஆடி-18 அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவியும் புதுமண தம்பதிகள் பட்டு வேட்டி-பட்டுசேலை அணிந்து, திருமண மாலைகளை ஆற்றில் மிதக்கவிட்டு, சூரியனை வழிபடுவர். மேலும், காவிரி வெள்ளம்போல், வாழ்வில் என்றும் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று வேண்டுவர்.
திருமணமான பெண்ணுக்கு அவரின் கணவர் புதுத் தாலி கட்டுவதும், அதைத் தொடர்ந்து படித்துறையில் பூ, பழங்கள் வைத்து குடம் வைத்து பூஜை செய்வதும் நடைபெற்றது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து வழிபட்டனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் - பட்டீஸ்வரம் துர்க்கை தலம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், வலங்கைமான் மகா மாரியம்மன் ஆகிய கோயில்களில் ஆடிப்பெருக்கு களைகட்டியது.