பார்வதி தேவி கன்னிப் பெண்ணாக இருந்து, ருதுவாகிப் பெரியமனுஷி ஆன மாதம் ஆடி மாதம் என்பர். வயதுக்கு வந்த பெண்களைப் பதினெட்டு நாள் விலக்கி வைப்பர். அதன் பிறகே சடங்கு விசேஷம் நடக்கும். அதன்படி பார்வதி ருதுவான பதினெட்டாவது நாளே ஆடிப்பெருக்கு எனக் கூறுவர்.
சிவனை மணக்கப் பார்வதி ஒற்றைக் காலில் தவம் செய்கையில் கையில் வைத்திருந்த மாலையைப் பெண்ணாக்கி அகத்தியரிடம் பார்வதி வழங்க, அப்பெண்ணைத் தன் கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார் அகத்தியர்.
கயிலையில் சிவனின் மண விழாவின் போது, வடபுலம் தாழ்ந்து தென் புலம் உயர அகத்தியரைத் தென்னகம் அனுப்பிய போது அகத்தியரின் கையில் இருந்த கமண்டலத்தை காக்கை தள்ளி விட அதிலிருந்து வழிந்ததே காவிரி ஆறு. மீதித் தண்ணீரை எடுத்து தாம் வாழ்ந்த பொதிகை மலையில் அகத்தியர் விட அது தாமிரபரணி ஆயிற்று.
திருமணம் ஆகாத பெண்கள் தாலிச் சரடு வணங்கிக் கட்டிக்கொண்டால் விரைவில் மேளம் கொட்டும் என்பது நம்பிக்கை.
ஆடிப் பெருக்கில் முளைப்பாரி எடுப்பதும் விஷேசம். பெண்கள் நவதானியங்களை வளரச் செய்து முளைப்பாரி எடுப்பது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோரங்களில் முளைப்பாரி எடுக்கின்றனர்.
தங்கள் இல்லங்களில் விரதம் இருந்து முளைப்பாரியை வளர்த்து காவிரிக் கரையோரப் பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் அவற்றைச் சுமந்து காவிரி ஆற்றுக்கு வந்து முளைப் பாரியை எல்லா வளமும் பெருக வேண்டும் என்று காவிரியில் போட்டு விட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.