திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தான உற்சவம் இன்று காலை பெரும் விமரிசையாக நடைபெற்றது.
ஏழுமலையானுக்கு தேவஸ்தான ஆண்டு வரவு செலவு கணக்குகளைச் சுவாமியிடம் சமர்ப்பிக்கும் உற்சவமான ஆனிவார ஆஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று மாலை அலங்கார புஷ்ப பல்லக்கில் உற்சவர் மலையப்ப சுவாமி பவனி வந்து அருள்பாலிப்பார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்படுவதற்கு முன்பாக, கோயில் ஆண்டு கணக்கு வழக்குகள் அனைத்தும் ஆனி மாத இறுதி நாளன்று ஏழுமலையான் சந்நிதி முன் சமர்ப்பிக்கப்படுவது வாடிக்கை. ஆடி மாத முதல் நாளன்று புதிய கணக்கு தொடங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறைகள் வைணவ மகா குரு ராமானுஜர் வகுத்ததாகும். ஆந்திர அரசு சார்பில் தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்ட பின்னர், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேவஸ்தான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆனி மாத இறுதி நாளான இன்று ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
புதிய கணக்குகள் தொடங்கும் புத்தகம், கஜானா சாவி உள்ளிட்டவற்றை ஏழுமலையான் பாதத்திலிருந்து எடுத்து அர்ச்சகர்கள் செயல் அதிகாரியிடம் அளித்தனர்.
ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையானுக்கு ஆனிவார ஆஸ்தானத்தின் போது ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் 6 பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் இணைந்து மாடவீதியில் ஊர்வலமாக வந்து ஏழுமலையான் கோயிலுக்குள் பெரிய ஜீயரிடம் பட்டு வஸ்திரங்களை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட பெரிய ஜீயர் ஆனிவார ஆஸ்தானம் தொடங்குவதற்கு முன்பாக ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.