திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருப்போரூரில் புராதனப் பெருமை கொண்ட கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை உடனுறை கந்தசாமி சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் விநாயகர் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர்கள் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சந்தனம், பால் தயிர், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்து கொடிமர பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கொடிமரத்தையும், சுவாமியையும் வழிபட்டனர்.
இதன் முக்கிய நிகழ்வுகளாக, வரும் 16-ஆம் தேதி காலையில் ரத உற்சவமும், 22-ஆம் தேதி திருக்கல்யாண உற்வசமும் நடைபெற உள்ளன. விழா நாள்களில் காலை, மாலை ஆகிய இருவேளையும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வாகனங்களில் இரவு வீதி உலா ஆகியவை நடத்தப்படும்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம்.சக்திவேல், தக்கார் க.ரமணி, மேலாளர் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ஆலய சிவாச்சாரியார்கள், ஊர்ப் பொதுமக்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஆகியோர் செய்துள்ளனர்.