திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் திருக்குளத்தில் புதிய இரும்பாலான தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இக்குளத்துக்கு மாலை வேளையில் தேவஸ்தானம் சார்பில் ஆரத்தி காட்டப்படுகிறது.
குளத்தில் நீராடும் பக்தர்கள் அதிக ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்காக தேவஸ்தானம் குளக்கரையை சுற்றி இரும்பு தடுப்புக் கம்பிகளை ஏற்கெனவே பொருத்தியிருந்தது. அந்தத் தடுப்புகள் பழுதடைந்து விட்டதால் எளிதில் துருப்பிடிக்காத கம்பிகளை தேவஸ்தானம் தற்போது அமைத்து வருகிறது. ரூ.4.50 கோடி செலவில் இப்பணிகள் வியாழக்கிழமை முதல் கிழக்கு மாடவீதியை ஒட்டியுள்ள குளத்தில் நடைபெற்று வருகின்ரன. இப்பணிகள் மார்ச் மாத பௌர்ணமிக்குள் முடிவடையும். அதன் பின் மற்ற பக்கங்களில் பணிகள் நடைபெற உள்ளன. திருக்குளத்தில் நீராட வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். 6 அடி உயரம், 4 அடி நீளம் என திருக்குளத்தை சுற்றி 1260 அடி தூரத்துக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட உள்ளன.