தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாளான நாளை (18.10.2019) துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் (16.11.2019) சனிக்கிழமையன்று முடிகிறது. முடவன் முழுக்கு, கார்த்திகை முதல் நாள் வருகிறது (17.11.2019).
துலா மாதக் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார்.
இதையும் படிக்கலாம்: எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்களாம் இந்த ராசிக்காரர்கள்!
ரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீரஹத்தி தோஷம் ஏற்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி, காவேரி ஸ்நானம் செய்து தனது சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள். காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு காரியங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு." என்று சொன்னவுடன் எமனும் அதன்படியே செய்வதாக வாக்களித்தான்.
ஒரு முறை அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதைக் கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான் காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளிவிட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள்.
இப்படிப்பட்ட புண்ணியமான நாட்களில், காவிரி பாயும் அனைத்து இடங்களிலும், ஒரு நாள் நாமும் கலந்துகொண்டு துலாஸ்நானம் செய்து அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பெறுவோம்.