திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற உள்ள வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை தேவஸ்தானம் அங்குரார்ப்பணத்தை நடத்தியது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இந்த பவித்ரோற்சவம் எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெற தேவஸ்தானம் அதற்கு முன்தினம் அங்குரார்ப்பணத்தை நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
இதையொட்டி, அர்ச்சர்கள் விஷ்வக்சேனர் தலைமையில் குழுவாகச் சென்று அருகில் உள்ள நந்தவனத்தில் புற்று மண் எடுத்து வந்தனர். அதை தரையில் கொட்டி, அதில் பூதேவியின் வடிவத்தை வரைந்து அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து மண் பாலிகைகளில் இட்டு, அதில் ஊறவைத்த நவதானியங்களை முளைவிட்டனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேவைகள் ரத்து: வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வியாழக்கிழமை (செப். 12) திருப்பாவாடை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவையும், செப். 13-ஆம் தேதி அபிஷேகத்துக்குப் பின் அளிக்கப்படும் தரிசனம், பிரேக் தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை உள்ளிட்ட சேவைகளும், செப். 14-ஆம் தேதி பிரேக் தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.