சிவகங்கை அருகே சாமியார் ஒருவர் ஜீவசமாதி ஆகப்போவதாகச் செய்தி அறிந்து அவரை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த சாமியார் இருளப்பசாமி. 80 வயதாகும் இவர் ஜீவசமாதி ஆகப்போவதாக சமீபத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜீவசமதி அடைவதற்காக கடந்த 30 நாட்களாக உணவைத் தவிர்த்து தண்ணீர் மட்டுமே பருகி வருகிறார்.
இதுகுறித்து அந்த சாமியார் கூறுகையில்,
பல ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் அன்று இரவே சிவபெருமான் கனவில் வந்து தன்னை பிழைக்க வைத்ததாகவும் கூறினார். அன்று முதல் கால் நடையாகவே அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வருகிறேன். தற்போது சிவனடியை அடையும் நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான இடத்தில் இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலை 5.00 மணிக்குள் முக்கி அடைய இருப்பதாகவும், அந்த இடத்தில் ஜீவ சமாதி எழுப்ப வேண்டும் என்றும் சாமியார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்பிறகு பாசங்கரை கிரமம் செழிப்பாக இருக்கும் என்று தெரிவித்து அழைப்பிதழ் அடித்துக் கொடுத்துள்ளார். ஜீவசமாதி அடையப்போகும் சாமியாரை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியாரை பார்த்துச் செல்கின்றனர்.
கம்ப்யூட்டர் காலத்திலும், இந்த செய்தி பரவியதை அடுத்து மக்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு சாமியாரை காண வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.