மேலூர்: அழகர்கோவில் வளாகத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் 7-ஆம் நாளில் மண்டூக மகரிஷிக்கு சுந்தரராஜப்பெருமாள் மோட்சம் அருளிய வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நிகழ்வைத் தொடர்ந்து, அழகர்கோவிலில் இருந்து மதுரை வந்து, வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருள்வதை சித்திரைத் திருவிழாவாக மக்கள் கொண்டாடி வந்தனர். நிகழாண்டு கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.
இதன்காரணமாக கோயில்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்கவும், சுவாமி தரிசனத்துக்கும் தடைசெய்து அரசு உத்தரவிட்டது. அதனால், இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் வாகனக் காட்சியாக அழகர்கோவிலில் உள் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை பெருமாள் கருடவாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
தேனூர் மண்டகப்படி செயற்கையாக அழகர்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கடலூரில் இருந்து புதிதாக வடிவமைக்கப்பட்ட 3 அடி உயரமுள்ள மண்டூகமகரிஷி உருவச்சிலை கருடசேவையின்போது எழுந்தருளச் செய்யப்பட்டது.
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளிய வைபவம் நடைபெற்றது.