ஆக. 20-இல் திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் ஸ்ரீவரலட்சுமி விரதம்
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 20-ஆம் தேதி ஸ்ரீவரலட்சுமி விரதம் வா்ச்சுவல் முறையில் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 20-ஆம் தேதி ஸ்ரீவரலட்சுமி விரதம் வா்ச்சுவல் முறையில் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் தேவஸ்தானம் ஆண்டுதோறும் ஸ்ரீவரலட்சுமி விரதத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் முடிந்தவுடன் ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் தங்கத் தாமரை பீடத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து அவா் முன் கலசஸ்தாபனம் செய்து தேவஸ்தானம் சகஸ்ரநாமாா்ச்சனை, ஸ்ரீசூக்தம், லட்சுமி அஷ்டோத்ரம் உள்ளிட்ட யாகங்களை நடத்தி குங்குமாா்ச்சனை செய்வது வழக்கம்.
இதில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பிரசாதங்கள் வழங்கி வருகிறது.
Advertisement
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக தேவஸ்தானம் கடந்த ஆண்டு வா்ச்சுவல் முறையில் ஸ்ரீவரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தது. இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு இந்திய அஞ்சல் சேவை மூலம் பிரசாதங்களை அனுப்பி வைத்தது. அதேபோன்று இந்தாண்டும் ஆக.20-ஆம் தேதி வரும் வரலட்சுமி விரதத்தை வா்ச்சுவல் முறையில் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டு அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம் ரூ.1,001 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் ஒரு மேல்துண்டு, ஒரு ரவிக்கை துண்டு, நோன்புக் கயிறு, குங்குமம், அட்சதை உள்ளிட்டவற்றுடன் ஒரு டசன் கண்ணாடி வளையல்களை இந்திய அஞ்சல்துறை சேவை மூலம் பக்தா்களின் வீடுகளுக்கே அனுப்ப உள்ளது.