மணப்பாறையில் முறையான குடிநீர் விநியோகிக்கக் கோரி சாலை மறியல்
திருச்சி, மணப்பாறையில் முறையான குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட அண்ணாவி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி மூலம் காவிரி குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அப்பகுதி குடிநீர் செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலைகளில் வழிந்தோடியதாகவும், அதன் காரணமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை என்றும் புகார் கூறும் பொதுமக்கள், இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் அலட்சியப்போக்குடன் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.
அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திருச்சி சாலை மாரியம்மங்கோவில் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அவ்வழிச் சாலை போக்குவரத்து முழுவதும் முடங்கி வாகன நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் சமரசம் பேசியபோது,
அவர்களுடன் அப்பகுதிவாசிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் உடனடியாக பழுதடைந்துள்ள குழாய் பகுதியினை சீர் செய்து குடிநீர் விநியோகம் முறையாக அளிப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.