ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம், நவக்கிரங்களில் குரு பகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் அடையும் நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டும் குருபகவான் வரும் மே 1 ம் தேதி புதன்கிழமை மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு அன்றையதினம் ஆலங்குடியில் இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், மூலவர் குருபகவான், உற்சவ தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவ தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள் ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார், சுரேஷ்ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர்.
ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். லட்சார்ச்சனையில் பங்கேற்றவர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினாலான 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்பட்டது. லட்சார்ச்சனை தொடக்கவிழாவில் கோயில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல்கட்ட லட்சார்ச்சனை வரும் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரையும், குருப்பெயர்ச்சிக்குப்பின் மீண்டும் மே மாதம் 6 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. லட்சார்ச்சனை கட்டணம் 400 ரூபாயாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.