முறத்தாலே புலியதனைத் துரத்தி நின்ற
முழுவீர மங்கையினை அறிவீர் நீரே...
திறத்தாலே வாழ்வியலில் பன்ம டங்கு
தினந்தினமும் உயர்கின்ற மங்கை யர்கள்
புறவாழ்வில் பாலியலாய் வன்மு றைக்குப்
பரிதவிப்பாய் ஆளாகும் நிலையைக் கண்டே
அறச்சீற்றம் கொள்ளாமல், கடந்து போகும்
அவலநிலை கண்டுமனம் ஆற வில்லை...
மகளிர்நாள் கொண்டாடும் மனநி லையில்
மாறாத மங்கையரின் போராட் டத்தை
அகமதிலே உணர்ந்தோமா ஆய்ந்தறிந்தால்
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் துன்பம்
நகத்தளவும் குறையவில்லை தொடரும் நாளும்...
நாடகமாய்ச் சமவுரிமை வாய்ப்பு நல்கி
முகமெதிரே பேசாமல் முதுகின் பின்னே
முடிவுரையாய் ஏளனத்தை முன்வைக் கின்றார்...
கருவறையிற் றொடங்குகின்ற போராட் டங்கள்
கல்லறையில் முடியாமல் தொடரு கின்ற
அருவருப்பை அணியணியாய்க் காணு கின்றோம்
அவையெதிர்த்து முன்னேறி விளங்கு கின்றொவ்
ஒருபெண்ணும் உலகினிலே வீர மங்கை
ஒன்றாக எழுந்துநிற்பின் இமயம் இங்கே
சிறுஉயரம் கொண்டுதினம் வணங்கி நிற்கும்.