மழை பிடிக்கும் பிஞ்சுக் கைகள்
அமுதம் ஏந்தும் அன்புச் சின்னங்கள்.
நனையாதே என்றாலும்
பெய்யும் மழையில்
ஆனந்தக் கூத்தாடி
நனையும் குழந்தைகளுக்குத் தெரியும்
அது ஒரு சொர்க்கமென்று.
காலநேரம் கப்பல் விட,
குழந்தைகளின் கைகளில்
கப்பலாய் மாறும்
காகிதங்கள் பிறப்புக்குக்
கர்வங் கொள்ளும்.
சாரலடிக்கும் மழையோ
தூறலாகும் மழையோ
பிஞ்சுகளின் செல்லங்கள்.
சின்னக் கைகளுயர்த்தி
மழைத்துளிகளை ஏந்தும்
அட்டகாச ஆனந்தம்
குழந்தைகளுக்கே உண்டு.
மரங்களையெல்லாம்
வெட்டி விட்டு
மழை தேடும் மனிதர்களே..
சிறுகுழந்தைகளை
நான்கு சுவர்களுக்குள்
அடைத்து வைக்காமல்,
வெயிலோடு காயவும்
மழையோடு நனையவும்
சுதந்திரமாக இருக்கவிடுங்கள்.
மழைக்காகவாவது
மரங்களை விட்டுவையுங்கள்.
மழலையர்க்காகவாவது
மழையினை
வானத்தில் சேமியுங்கள்.
அப்போது தான்
பெய்யெனப் பெய்யும் மழை
குழந்தைகளின் செல்லமழையாகும்.