நல்கித் தான் காத்துஅளிக்கும் பொழில்ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப் புனல்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே,
மல்குநீர்க் கண்ணேற்கு ஓர்வாசகம் கொண்டுஅருளாயே.
குளிர்ச்சியான, நீர்நிறைந்த தோட்டத்திலே இரை தேடுகிற வள்ளல் குணமுடைய சிறிய குருகே,
ஏழு உலகங்களையும் தானே உருவாக்கி, காத்து, அருள்புரிகிறான் எம்பெருமான், அந்த நாராயணனைக் கண்டால், 'இந்தப் பெண்ணுக்குத் திருவருள் புரியமாட்டீர்களா?' என்று கேட்பாயா? அவன் சொல்லும் பதிலை, கண்ணில் நீர்மல்க நிற்கும் என்னிடம் வந்து சொல்வாயா?