அமேசான் ஒரு வெற்றிக் கதை - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.168; ரூ.150; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; )044 - 4200 9603.
இன்று இணையத்தின் வழியாகப் பொருள்களை வாங்குவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் 23 ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு கனவு போலத்தான் இருந்திருக்க வேண்டும். அந்தக் கனவை அப்போதே நனவாக்கியவர் ஜெஃப் பெúஸாஸ். 1994 இல் அமேசான்.காம் அவரால் தொடங்கப்பட்டது.
முதன்முதலில் புத்தகங்களை மட்டுமே வாங்கும் வசதியை அமேசான் தந்தது. ஆனால் என்று எல்லாப் பொருள்களையும் - பிடித்தமான உணவகத்தின் பிடித்தமான உணவு வகைகளையும் கூட - அமேசானில் ஆர்டர் செய்து, பெற முடியும்.
ஆன் லைன் வணிகத்தின் இந்த உச்சியைத் தொட அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பட்ட கஷ்டங்கள், அவர் அடைந்த தோல்விகள், பெற்ற படிப்பினைகள், அமேசான்நிறுவனம் செயல்படும் விதம் என எல்லாவற்றையும் விரிவாகச் சொல்கிறது இந்நூல்.
ஜெஃப் என்ற மனிதரின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலை, தொழில் தொடங்கியது, மண வாழ்க்கை உட்பட எல்லாவற்றையும் ஒரு நாவலின் மொழிநடையோடு மிகவும் சுவையாக எழுதியுள்ள நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும்.
"வாடிக்கையாளரே தெய்வம்' எனக் கருதும் ஜெஃப்பின் வெற்றிக்கு அவருடைய திட்டமிடல்களும், விடாமுயற்சியும் காரணமாக இருந்தாலும், அவர் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பு இல்லாமல் அவர் இதனைச் சாதித்திருக்க முடியாது. ஆனால் அவர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு குறைந்த சம்பளம், இடுப்பொடியும் வேலை, அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 20 மணி நேரம் 14 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தில் உழைத்த கிறிஸ்டோஃபர் ஸ்மித் என்பவரைப் பற்றிய தகவல் அதிர்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்கதையின் இருண்ட பக்கத்தை நமக்குக் காட்டிவிடுகிறது.