மெய்ப்பொருள் கண்டேன் - எஸ்.ஆர்.சுப்பிரமணியம்; பக்.330; ரூ.320; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14. 044-28132863/43408000.
சுதந்திரப் போராட்ட தியாக வரலாற்றை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறது இந்நூல். இன்றைய சமுதாயத்தில் இருக்கும் முரண்பாடுகளையும், இழிநிலைகளையும் அடையாளப்படுத்தி, அதற்கான தீர்வுகாணப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
நாட்டின் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, ஊழல் தடுப்பு, சமமான கல்வி, சாதி பேதமற்ற சமுதாயம், கல்வி, வேலைவாய்ப்பில் முறையான ஒதுக்கீடு இவைதான் சராசரி இந்தியனின் கோரிக்கை. 70 ஆண்டுகளாக இந்த உணர்வுக்கு விடியலே இல்லாமல் போனதற்கு வாக்குவங்கி அரசியலுக்குள் நாம் விழுந்துவிட்டதுதான் என்கிறார் ஆணித்தரமாக.
தனது தாய்மொழி குஜராத்தியாக இருந்தபோதிலும், தமிழ் மொழியையும் தனது தாய்மொழிபோல் காந்தியடிகள் கருதியது தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்குக் கிடைத்த பெருமை.
தமது வாழ்நாளின் இளமைக்காலத்தில் தென்னாப்பிரிக்கா முதல் இறுதிக்காலம் வரை காந்தியடிகள் தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டு மக்கள் மீதும் மிகுந்த அன்பு செலுத்திவந்ததைப் படிக்கும்போது உணர்ச்சிமேலிடுகிறது. தமிழகத்தில் அவர் செய்த சுற்றுப்பயணங்களை வெகுநேர்த்தியாக தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
மகாத்மா காந்தியுடன் அரசியலில் முரண்பட்டவர்கள் கூட அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை, சிந்தனைகளை நேசித்து, பின்பற்றி வந்ததை வரலாறு பதிவு செய்து நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.
மனிதர்கள் சுயநலத்தை கைவிட்டு சக மனிதர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒற்றுமையுடன் செயல்பட்டால் புதிய சமுதாயத்தை உருவாக்க இயலும். மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற நாம் நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்க கருத்து. காந்தியத்தைப் புரிந்துகொள்ள உதவும் நூல்.