அச்சம் தவிர்... ஆளுமை கொள் - பரமன் பச்சைமுத்து; பக்.160; ரூ.150; சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; ) 044- 2434 2771.
படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது.
அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம்.
அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளுதலே அச்சத்தை வெல்வதற்கு அடிப்படை என்று இந்நூல் விளக்குகிறது.
அச்சம் நீங்கிய ஒருவர் தனது ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் இந்நூல் வழிகாட்டுகிறது.
ஆங்கிலத்தில் பேச என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆளுமையாக உருவாக விரும்பும் ஒருவர் அதற்கேற்ற ஆடையை அணிய வேண்டும்; சொந்த வாழ்க்கையிலும், பணி வாழ்க்கையிலும் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்; வேலைக்காக மட்டும் வாழக் கூடாது; இசை கேட்டு மனத்தை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்; போதிய உணவு, போதிய உடலுழைப்பு, போதிய உடற்பயிற்சி, போதிய உறக்கம், போதிய ஓய்வு ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஆளுமைக்கு அழகு அதே இடத்தில் தேங்கி நிற்பது அல்ல, அடுத்த உயரத்தை நோக்கி நகர்வது என ஆளுமைப் பண்புகளை வளர்த்து வாழ்க்கையின் முன்னேற இந்நூல் வழிகாட்டுகிறது. சுயமுன்னேற்றத்துக்கு மனதை மாற்றச் சொல்லி மட்டும் எழுதப்படும் நூல்களிலிருந்து வேறுபடும் இந்நூல், எவற்றையெல்லாம் செய்தால் முன்னேறலாம் என்று நடைமுறை சார்ந்து விளக்கியிருப்பது சிறப்பு.