அறிஞர்கள் பார்வையில் கவிஞர் மு.மேத்தா - உ.அலிபாவா; பக். 240; ரூ.200; கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; 044- 42161657.
40 ஆண்டுகளுக்கு முன்பு நா.காமராசனின் "கறுப்பு மலர்களும்', மு.மேத்தாவின் "கண்ணீர் பூக்களும்' பிரபலம். அதேபோன்று காந்தியடிகளின் காவியத்தில் தேசியத்தையும், மனிதப் புனித வாழ்வுக்கு வழிகாட்டிய நபிகள் (ஸல்) குறித்து "நபிகள் ஒரு காவியம்' என்ற நூல்களும் குறிப்பிடத்தக்கவையே!
கவிதைகள் தவிர, சிறுகதைகள், நாவல்கள் என எழுதியதன் மூலம் பன்முக ஆளுமை கொண்டவர் மேத்தா. அவரின் படைப்புகள் குறித்த ஆய்வுத் தொகுப்பு இந்த நூல்.
'சிறந்த கவிதைகளுக்கு அடையாளம் அவை வாசகனின் நினைவில் திரும்பத் திரும்ப வரவேண்டும்' என்ற வகையில் எழுதப்பட்டதுதான் மு.மேத்தாவின் கவிதைகள் என்கிறார்.
அணிந்துரையில் தமிழண்ணல். "கவிதை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக, இனிமையாக உலவிக் கொண்டிருந்தவர் மேத்தா' என டாக்டர் பொற்கோ குறிப்பிட்டுள்ளார்.
'மேத்தாவின் கவிதை நடை எல்லோரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். சமூக பிரக்ஞையைப் படம் பிடிக்கும். உயிர்த் துடிப்பும், கொந்தளிப்பும் கொண்டவை' என்கிறார்
பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம்.
சிலம்பொலி செல்லப்பன், சி.இ.மறைமலை, இன்குலாப், அ.அறிவொளி, பொன்.செல்வகணபதி, சி.நயினார் முகமது உள்ளிட்ட 26 தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இந்
நூலில் உள்ளன. ஆய்வுக் கட்டுரைகள் தமிழறிஞர்களின் ஆய்வுப் பரப்பைக் காட்டுகின்றன.
ஆய்வுகளில் மேத்தாவின் புலமை, எளிமையான சொல்லாடல், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வரதட்சிணை குறித்த சமூக நோக்கு "தமிழ்- தமிழன்- இந்தியா- உலகு' என சமூகப் பார்வை உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியம் பேசினாலும் எங்கெல்லாம் மக்கள் பாதிக்கிறார்களோ அவர்களின் குரலாக கவிதை வடிப்பார் மேத்தா என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொகுப்பாசிரியரின் உழைப்பு தெரிகிறது.