வரலாற்றில் கல்வெட்டுக்கள் - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.192; ரூ.200; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.
முந்தைய வரலாறு, பண்பாட்டை அறிய முக்கியமான அடிப்படை ஆதாரமான கல்வெட்டுகள் கோயில்கள், மலைகள் நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இருப்பதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்த நூல். நாட்டிலேயே அதிக அளவில் தமிழ்நாட்டில்தான் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. நம்பத்தகுந்த ஆவணங்களான இவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்காகவே மன்னர்கள் பதித்து சென்றுள்ளனர்.
ஆயிரக்கணக்கான நூல்கள் படிக்கப்பட்டு அச்சாக்கம் செய்யப்பட்டாலும், பல ஆயிரம் நூல்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்றும் இதற்கான சிறப்பை இன்றைய மக்கள் பெருமளவில் உணரவில்லை என்றும் அவர் வேதனையுடன் கூறுகிறார்.
கற்கள் அறிந்த காலம் முதல் இன்றைய காலம் வரையிலான கல்வெட்டுகள், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் உள்ளிட்ட பிறமொழி கல்வெட்டுகள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகங்கள், அருங்காட்சியகம், சுடுமண், செப்பேடுகள், கோயில்கள், ஓவியங்களின் வகைகள் உள்பட 33 தலைப்புகளிலான கட்டுரைகளில் இவற்றின் அவசியம், பாதுகாக்க வேண்டியதன் நோக்கம் என்று சுருக்கமான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு கட்டுரைக்குமான புகைப்படங்கள் அருமை.
கல்வெட்டு, வரலாற்றை அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.