பாடல் 9:
பாய் ஓங்கு பாம்பணை மேலானும் பைந்தாமரையானும்
போய் ஓங்கிக் காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார்
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கைச்
சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே
விளக்கம்:
பைந்தாமரை=பசுமையான இளம் தாமரை மலர்; ஓங்கி=உயரப்பறந்து; ஓர்தல்=ஆராய்தல்;
பொழிப்புரை:
பாயாக அமைந்த பாம்பணை மேல் பள்ளி கொள்ளும் திருமாலும், இளம் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும், கீழே அகழ்ந்து சென்றும் மேலே பறந்து சென்றும் காண இயலாத வண்ணம் நீண்ட நெடும்பிழம்பாக நின்றவரே, புறச்சமயங்களில் நில்லாமல் அகச்சமயங்களில் நின்று உனது தன்மையை அறிந்து கொண்டு போற்றுவோரும், மூன்று வகையான தீக்களை வளர்த்து வேள்வி செய்வோரும், நான்மறைகளை கற்றறிந்தவர்களும் வாழும் செல்வச்செழிப்பு மிகுந்த தலைச்சங்கை தலத்தில் உள்ள உயர்ந்த மாடத்தினை உடைய கோயிலினை, நீர் உறையும் திருக்கோயிலாக கொண்டுள்ளீர்.