பயிற்சி ஆட்டம்: இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு!
முதல் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இந்த 5 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார்.
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணியுடனான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.
இதற்கு முன்னோட்டமாக இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவரின் லெவன் அணிகளிடையிலான 3 நாள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற எதிரணியின் கேப்டன் லஹிரு திரிமானி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அபாரமாக ஆடிய ரஹானே சதம் விளாசினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 79 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.
Advertisement
இரண்டாம் நாளான இன்று, தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி பந்துவீச்சாளர் ரஜிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பிறகு ஆடிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முதல் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இந்த 5 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். இறுதியில், 31 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இஷாந்த் 5, அஸ்வின் 2, ஆரோன் 2, ஹர்பஜன் 1 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 31, ராகுல் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.