இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் புஜாரா சதம் அடித்துள்ளார்.
கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல்நாள் ஆட்டத்தின் முடிவில், 15 ஓவர்களில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 19 ரன்களுடனும், விராட் கோலி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே கோலியின் விக்கெட்டை எடுத்தது இலங்கை அணி. அவர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா நன்கு ஆடினார். 65 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த ரோஹித், பிரசாத் பந்துவீச்சில் அவுட் ஆனார். பிறகு வந்த பின்னி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ரோஹித் போல ஓஜாவும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார். 21 ரன்கள் எடுத்த அவர் கவுசல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்டிலாவது நன்கு ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். பிறகு வந்த மிஸ்ரா தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார்.
முரளி விஜய், ஷிகர் தவான் ஆகிய இருவரும் இல்லாததால் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட புஜாரா, மிகவும் கவனமாக ஆடினார். மற்ற எல்லா விக்கெட்டுகளையும் திட்டமிட்டு வீழ்த்த முடிந்த இலங்கை அணியால் புஜாராவை மட்டும் அசைக்கமுடியவில்லை. பவுலர்களுக்குச் சாதகமான பிட்சில் புஜாராவின் பேட்டிங் அனைவரையும் கவர்ந்தது. 214 பந்துகளில் அவர் சதம் அடித்தார். இது அவருடைய 7-வது டெஸ்ட் சதமாகும்.
தேநீர் இடைவேளையின்போது, இந்திய அணி 77 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை வீரர் பிரசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.