இந்தியா - இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் மழை பாதிப்புக்கிடையே முதல் இன்னிங்ஸில் இந்தியா 312 ரன்களும், இலங்கை 201 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு 386 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4-ஆம் நாள் முடிவில் 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இதனால் 22 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் வரலாற்று வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு கனிந்துள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கியபோது வழக்கம்போல இஷாந்த் சர்மா மிகுந்த உத்வேகத்துடன் பந்துவீசினார். 21-வது ஓவரில் அவர் மேத்யூஸின் விக்கெட்டை எடுத்திருக்கவேண்டும். ஆனால், அப்போது நோ பால் வீசியதால் கீப்பர் பிடித்த கேட்ச் பயனில்லாமல் போனது. ஆனால், அடுத்த ஓவரில் சில்வாவின் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இதன்பிறகு மேத்யூஸும் திரிமானேவும் தாக்குப் பிடித்து ஆடினார்கள். அஸ்வின் மீண்டும் பந்துவீச வந்தபோது திருப்புமுனை உண்டானது. 38-வது ஓவரில் திரிமானேவின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்குப் புத்துணர்ச்சி அளித்தார் அஸ்வின்.
5-ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.