இந்திய அணிக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸ் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பிறகு விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 3-வது நாள் விளையாட்டில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அதன் பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் நிதானமாக ஆடி அரை சதமடித்து நம்பிக்கையளித்தனர்.
இதையும் படிக்கலாமே: வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் அரை சதம் விளாசியதால் நம்பிக்கை பெற்ற இந்திய அணி
முடிவில் இந்திய அணி 111.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
டேவிட் வார்னர் 20 ரன்களுடனும், ஹாரிஸ் ஒரு ரன்னுடனும் களத்திலுள்ளனர். ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி 21 ரன்களை எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.