முகப்பு
விளையாட்டு

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

Updated On : 18 மே 2026, 5:58 am IST
பகிர்:

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா 6-4, 6-7 (3/7), 6-2 என்ற செட்களில், 4-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 3 மணிநேரம் நீடித்தது.

இந்த வெற்றியின் மூலமாக, இத்தாலியின் ஓபன் போட்டியில் அவர், 3-ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளார். இதற்கு முன் ஸ்விடோலினா 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் இங்கு பட்டம் வென்றுள்ளார்.

Advertisement

அத்துடன் களிமண் களத்தில் நடைபெறும் போட்டிகளில் இதுவரை விளையாடிய 8 இறுதிச்சுற்றுகளிலுமே அவர் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கெüஃப் - ஸ்விடோலினா மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, ஸ்விடோலினா 4-ஆவது வெற்றியுடன் முன்னிலையை அதிகரித்துள்ளார்.

மறுபுறம் கெüஃப், இத்தாலியன் ஓபன் போட்டியில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தார். சாம்பியனான ஸ்விடோலினாவுக்கு வெற்றிக் கோப்பை, 1,000 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.11.64 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்த கெüஃபுக்கு ரன்னர் அப் கோப்பையுடன், 650 தரவரிசை புள்ளிகளும், ரூ.6 கோடியும் பரிசாகக் கிடைத்தது.

இரட்டையர் பிரிவு: இத்தாலியன் ஓபன் ஆடவர் இரட்டையரில், உள்நாட்டின் சைமன் பொலெலி/ஆண்ட்ரியா வவாசோரி இணையும், மகளிர் இரட்டையரில் ரஷியாவின் டயானா ஷ்னெய்டர்/மிரா ஆண்ட்ரீவா கூட்டணியும் வாகை சூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.