ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற லீக் தொடரான பிக்-பாஸ் லீக்கின் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் விளையாடுவது குறித்த தகவல்களை அந்த அணி உறுதிபடுத்தியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், விராட் கோலி அனைத்துப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இங்கிலாந்து சென்று குடிபெயரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
விராட் கோலி ஐபிஎல்லில் இதுவரை 8 சதம், 56 அரைசதம் உள்பட 8094 ரன்கள் விளாசியுள்ளார். இந்தத் தொடரிலும் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார்.
இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வேளையில் வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடைவிதித்திருக்கிறது. இந்த நிலையில், சிட்னி அணியில் விராட் கோலி விளையாட விருப்பதாகவும் அதற்கான 2 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சிட்னி அணி தெரிவித்திருக்கிறது.
இதனால், இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் ஆரவாரமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் சிட்னி அணிக்காக விளையாடி வருகிறார். பேப்-4 என்றழைக்கப்படும் விராட் கோலி - ஸ்மித் இருவரையும் ஒரே களத்தில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோலியின் படத்தைப் பகிர்ந்து அவர் சிட்னி அணிக்கு விளையாடவிருப்பதை அந்த அணி உறுதிசெய்தது. இந்தத் தகவல் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து இது உண்மையில்லை. ஏப்ரல் ஃபூல் என்றும் அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துகளையும் தெரிவித்து அனைவரையும் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.