முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 11) கொழும்பில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின.
இதையும் படிக்க: தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?
Advertisement
Advertisement
சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 101 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹர்லின் தியோல் 47 ரன்கள், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள், ஹர்மன்பிரீத் கௌர் 41 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் மல்கி மதாரா, திவ்மி விஹங்கா மற்றும் சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இனோகா ரணவீரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இந்தியா அபார வெற்றி
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 66 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஸ்நே ராணா பந்துவீச்சில் போல்டானார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிலாக்ஷி டி சில்வா 48 ரன்களும், விஷ்மி குணரத்னே 36 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அமன்ஜோத் கௌர் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாகவும், இந்த தொடர் முழுவதும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.