பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்டனம்!
இன்றிரவு 8 மணிக்கு இந்தியா - பாக். ஆட்டம்: பிசிசிஐ, அரசுக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம்!
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் விளையாட பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் பலர் கொல்லப்பட்டதையடுத்து, இத்தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே மாதம் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில், சுமர் 203 நாட்களுக்குப் பிறகு, கிரிக்கெட்டிலும் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் நிலையில், மக்கள் மத்தியிலிருந்தும் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் அதிலும் குறிப்பாக பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பிசிசிஐ, மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. எக்ஸ் தளத்தில் இவ்விவகாரம் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.
Advertisement
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), சிவசேனை (உத்தவ் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.