கடினமான வேலையை எப்போதும் விரும்புகிறேன்: ஜஸ்பிரித் பும்ரா
கடினமான வேலை செய்வதையே எப்போதும் விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
கடினமான வேலை செய்வதையே எப்போதும் விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், கடினமான வேலை செய்வதையே எப்போதும் விரும்புவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சவால்களைப் பார்த்து நான் எப்போதும் ஓடி ஒளிந்துகொள்ள விரும்பமாட்டேன். எப்போதும் கடினமான வேலையை செய்துமுடிக்க விரும்புகிறேன். சவால்களை எதிர்கொண்டு விளையாடுவதற்காகவே கிரிக்கெட் விளையாடுகிறேன். என்னால் சிறப்பாக செயல்பட முடியும்போது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதைவிட வேறு எந்த ஒரு சிறப்பான உணர்வும் இருக்க முடியாது.
என்னுடைய கிரிக்கெட் பயணத்தை அகமதாபாதிலிருந்துதான் தொடங்கினேன். அகமதாபாதில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். கடந்த முறை இங்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் எங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண என்னுடைய மகன் வந்திருந்தான். கடந்த முறையும் அவன் இறுதிப்போட்டியைக் காண வந்திருந்தான். போட்டியைக் காண என்னுடைய அம்மாவும் வந்திருந்தார்கள். அது மிகவும் சிறப்பான தருணமாக இருந்தது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வது ஒருபோதும் நடக்காது. அதனை நடத்திக் காட்டியதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் மீது இத்தனை கனிவுடன் இருக்கும் கடவுளுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும் என்றார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.