மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! ஆப்கன் - இலங்கை டி20, ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக துபையில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையேயான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக துபையில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையேயான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருந்தன. இந்தத் தொடரின் டி20 போட்டிகள் சார்ஜா கிரிக்கெட் திடலில் மார்ச் 13, 15, 17 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் துபை பன்னாட்டு கிரிக்கெட் திடலில் மார்ச் 20, 22, 25 ஆகிய தேதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதலில் துபை விமான நிலையம் பலத்த சேதம் அடைந்தது.
இந்தப் போர்ப் பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையேயான வெள்ளைப் பந்து தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. விமான சேவை, போர்ப் பதற்றம் போன்றவைகள் காரணமாக இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இந்தத் தொடர்ந்து ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிகழாண்டில் கடைசியில் தொடரை நடத்திக் கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், போட்டி நடைபெறும் இடங்களை மாற்ற இரு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டிகள் துபை மற்றும் சார்ஜாவில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.