தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் ஒவ்வொன்றாக பயிற்சியை தொடங்க ஆரம்பித்துவிட்டன. வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமூக வலைத்தளப் பதிவின் மூலம் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக என்னால் செயல்பட முடியாது. ஆலோசகர் வேலைக்குத் தேவையான நேரத்தை என்னால் கொடுக்க முடியாது. இந்த ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், ஐபிஎல் தொடரில் என்னை நீங்கள் வர்ணணையாளராகப் பார்க்கலாம். ஐபிஎல் தொடர் உலகின் மிகச் சிறந்த டி20 தொடர். எதிர்வரும் ஐபிஎல் சீசனை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் 5 ஐபிஎல் சீசன்களில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். அவர் தில்லி கேபிடல்ஸ் (தில்லி டேர்டெவில்ஸ்) அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாகவும் அவர் வழிநடத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.