ஐபிஎல்: ஹைதராபாத் அணியில் இருந்து ஜாக் எட்வர்ட்ஸ் விலகல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளதைப் பற்றி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19 - வது தொடரின் முதற்கட்ட அட்டவணை வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் போட்டி மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அணிகள் ஒவ்வொன்றாக பயிற்சியைத் தொடங்க ஆரம்பித்துவிட்டன. வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்க தயாராகி வருகின்றனர்.
ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 25 வயதான ஜாக் எட்வர்ட்ஸ், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், எட்வர்ட்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 3 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
அணியின் பிரதான கேப்டனான பாட் கம்மின்ஸ் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், காயம் காரணமாக, எட்வர்ட்ஸும் விலகியிருப்பது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
எட்வர்ட்ஸ், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத ஒரே வெளிநாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.