ஐபிஎல் தொடரில் சாம் கரண் விளையாடாதது ஏன்? ஏமாற்றத்தின் உச்சத்தில் சங்ககாரா!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சாம் கரண் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடி வருவது குமார் சங்ககாரவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சாம் கரண் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடி வருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் டிரேடிங் முறை மூலம் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்தார். அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தனர்.
இருப்பினும், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக சாம் கரண் விலகினார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலங்கை வீரர் தாசுன் ஷானகாவை அணியில் மாற்று வீரராக சேர்த்தது.
Advertisement
Advertisement
ஏமாற்றத்தின் உச்சத்தில் சங்ககாரா!
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக காயம் என சாம் கரண் விலகுவதற்கான காரணம் என்ன எனவும், காயம் காரணமாக விலகிய அவர் இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியது எப்படி எனவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் சாம் கரணால் விளையாட முடியாது என்பதை எங்களிடம் தெரிவித்தார்கள். ஆனால், சர்ரே அணிக்காக இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் அவர் விளையாடியதாக நினைக்கிறேன். அவரது இந்த செயல் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சாம் கரண் விளையாட வேண்டும் என்பதை அனைவரும் விரும்பினோம். ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டதாக ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே கூறியதால் எங்களால் மாற்று வீரராக தாசுன் ஷானகாவை கொண்டுவர முடிந்தது. வீரர்கள் காயம் காரணமாக அணிக்காக விளையாடமால் விலகுவதை ஒழுங்குபடுத்த மேலும் கடுமையான கொள்கைகளை பிசிசிஐ வகுக்குமா?
பிசிசிஐ விதிகள் மேலும் கடுமையாக்கப்படுமா?
வீரர்கள் அவர்களது அணிக்காக விளையாடுவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் காயம் ஏற்படுவது தொடர்பான பிரச்னைகள் இருக்கும். சிலரால் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாட முடியாமல் போகலாம் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.
எங்களது அணியில் உள்ள சில வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடம் மில்னே, ஷிம்ரன் ஹெட்மேயர் போன்ற வீரர்கள் அணியில் இருந்தாலும், அவர்களால் காயம் காரணமாக அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. லுஹான் டி பிரிடோரியஸ் மற்றும் குவெனா மாபாகா ஆகியோர் அணியில் இருந்தும் அதிகம் விளையாடவில்லை. இருப்பினும், அவர்கள் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்கின்றனர். அணிக்காக தண்ணீர் பாட்டில்கள் எடுத்து வருகிறார்கள், அணிக்கு எந்த வடிவில் தங்களது ஆதரவை வழங்க முடியுமோ அந்த வடிவில் ஆதவரளித்தனர். அணிக்காக விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பது தனிப்பட்ட வீரர்களின் முடிவே. ஆனால், பிசிசிஐ இந்த விஷயங்களில் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும். அதனால், அனைத்து அணிகளும் பயன்பெறும் என்றார்.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறியது குறிப்பிடத்தக்கது.