மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக செயல்படாததன் காரணம் என்ன? தலைமைப் பயிற்சியாளர் விளக்கம்!
மும்பையின் தொடர் தோல்விகள் தொடர்பாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்தது குறித்து...
மும்பையின் தொடர் தோல்விகள் குறித்து, நாங்கள் சீராக செயல்படவில்லை என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) நடந்த இரண்டாவது போட்டியில், முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் காரணமாக, மும்பை அணி விளையாடிய 11 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றது. இந்த நிலையில், மும்பை அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
Advertisement
இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே தெரிவித்ததாவது:
”இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் போதுமான அளவு சீராகச் செயல்படவில்லை. அதுவே எங்களுடைய தோல்விகளுக்கான காரணம்.
உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், எங்களுடைய வீரர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும், சில வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
எங்கள் முக்கிய வீரர்கள் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து களத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், காரணங்கள் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் ஒரு தரமான அணி இருந்தது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஒட்டுமொத்தமாக நாங்கள் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை என்பதுதான் பிரச்னை” எனத் தெரிவித்தார்.