இங்கிலாந்தில் எனது பெயரை ரசிகர்கள் முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!
சிஎஸ்கேவின் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் பேட்டி குறித்து...
சிஎஸ்கேவின் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ”எனது பெயரை இங்கிலாந்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் அளவுக்கு கரகோஷமிட்டு முழக்கமிடுவதில்லை” எனக் கூறியுள்ளார்.
லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேமி ஓவர்டன் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். மொத்தமாக 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போதெல்லாம் ஜேமி ஓவர்டன் விக்கெட் எடுத்துக்கொடுத்திருக்கிறார். இதனால், சிஎஸ்கே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார்.
Advertisement
இந்த சீசனில் ஜேமி ஓவர்டன் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள், “ஜேமி ஓவர்டனுக்கு சிலை வைக்க வேண்டும்” எனக் கூறி வருகிறார்கள். சமீபத்திய பேட்டியில் ஜேமி ஓவர்டன் கூறியிருப்பதாவது:
சிஎஸ்கே அணியில் விளையாடுவது மிகவும் பிடித்திருக்கிறது. குடும்பத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. இந்த சீசனில் நான் சரியான லெந்தில் பந்துவீசுவதில் கவனத்தை குவித்துள்ளேன். வேகமாக வீசுவது நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. லைனில் சிறிதி மாறினாலும் ரன்கள் அடித்துவிடுவார்கள்.
இங்கிலாந்தில் ரசிகர்கள் எனது பெயரை சிஎஸ்கே ரசிகர்கள் முழக்கமிடுவதைப் போல கோஷமிடுவதில்லை. சிஎஸ்கே ரசிகர்கள் எனக்குப் பின்னால் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள்; கிரிக்கெட் குறித்து மிகவும் தெரிந்தவர்கள். சேப்பாக்கம், சென்னை ரசிகர்கள் அற்புதமானவர்கள். நமது பெயரை திடலில் ரசிகர்கள் முழுக்கமிடுவதைக் கேட்பது நன்றாக இருக்கிறது என்றார்.