தனி நபராக ஆட்டத்தை மாற்றக்கூடியவர் டேவிட் மில்லர்; முன்னாள் வீரர் பாராட்டு!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லரை இந்திய அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லரை இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அக்ஷர் படேல் மற்றும் டேவிட் மில்லர் அரைசதம் விளாசி அசத்தினர். அக்ஷர் படேல் 30 பந்துகளில் 56 ரன்களும் (8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), டேவிட் மில்லர் 28 பந்துகளில் 51 ரன்களும் (3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
Advertisement
இந்த நிலையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி டேவிட் மில்லர் தில்லி கேபிடல்ஸுக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் அவரைப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் மில்லர் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கத் தொடங்கியதும் அவர் லெக் திசையில் மட்டுமின்றி, ஆஃப் திசையிலும் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்துகிறார். அவருக்கு எதிராக பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு சவாலானதாக உள்ளது. பந்துகள் சரியாக பேட்டுக்கு வரவில்லையென்றாலும், டேவிட் மில்லர் சிறப்பாக ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடி ரன்கள் குவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் வித்தியாசமான விஷயங்களை பெரிதாக முயற்சிக்கவில்லை.
பந்துகள் மெதுவாக வந்தாலும் மில்லர் அது குறித்து கவலைப்படமால் அவற்றை சிறப்பாக ஷாட்டுகளாக மாற்றினார். அவரது இன்னிங்ஸ் மிகவும் இரக்கமற்றதாக இருந்தது. அதிரடியாக விளையாடி அவர் ரன்கள் மட்டும் குவிக்கவில்லை. மில்லர் இது போன்று அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட முடியும் என்ற விஷயத்தையும் தனது ஆட்டத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் என்றார்.
பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இந்த வெற்றி தில்லி கேபிடல்ஸுக்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.