சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் கிர்மானி பேசியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் கிர்மானி பேசியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடினாலும், இந்திய அணிக்காக அவர் டி20 போட்டிகளில் விளையாடி நீண்ட நாள்கள் ஆகிறது. அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரராக இருந்த ரிஷப் பந்த், தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் மட்டுமே இடம்பெறுகிறார்.
இந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்காக ரிஷப் பந்த் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் அவரது ஃபிட்னஸில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு வீரரும் நான் பிறந்ததிலிருந்தே அதிரடியாக விளையாடியக் கூட வீரர், சந்திக்கும் அனைத்துப் பந்துகளையும் அதிரடியாக விளையாடுவேன் எனக் கூற முடியாது. உங்களுக்கு நாள் சிறப்பாக அமைந்தால், உங்களால் அனைத்துப் பந்துகளையும் அதிரடியாக விளையாட முடியும். வீரர் ஒருவர் அனைத்து விதமான சூழல்களிலும் விளையாட வேண்டியிருக்கும். அணியின் தேவை என்ன என்பதையும் வீரர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்திய அணியில் எப்போதெல்லாம் ரிஷப் பந்த் இடம்பெறுகிறாரோ அப்போதெல்லாம் அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவருடன் விக்கெட் கீப்பிங் இடத்துக்கு போட்டியாக உள்ள வீரர்களைக் காட்டிலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் அவர் தொடர்ச்சியாக அணியில் இடம்பெறுவார்.
இந்திய அணியில் ரிஷப் பந்த் அறிமுகமானபோது, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவர்தான் மிகவும் திறமை வாய்ந்த வீரர் என நினைத்தேன். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பு வரை ரிஷப் பந்த்தான் மிகவும் திறமையான வீரர் என நினைத்தேன். ஆனால், ரிஷப் பந்த் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவது எனக்கு குழப்பமளிக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் யாரையும் குறைகூற முடியாது. அணியைத் தேர்வு செய்யும்போது, தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்கள் அவர்களது கடமையைச் செய்கிறார்கள். அதனால், ரிஷப் பந்த் நன்றாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். அவரை மீண்டும் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பார்க்க விரும்புகிறேன் என்றார்.