வயதான ரசிகைக்கு மரியாதை அளித்த தோனி: நெஞ்சை அள்ளும் விடியோ!
வயதான ரசிகைக்கு மதிப்பளித்து அவருடன் சிறிது நேரம் செலவழித்த தோனி உயர்ந்த குணம் கொண்டவர் என்று...
‘நான் தோனிக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன்.’
இப்படியொரு போஸ்டரைக் கையில் ஏந்திக்கொண்டு மூதாட்டி ஒருவர் நேற்று மும்பையில் நடைபெற்ற சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு வருகை தந்தார். அவருக்கு தோனியைச் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
ஆட்டம் முடிந்தபிறகு தனது வயதான ரசிகையைச் சந்திக்க ஓய்வறையிலிருந்து மைதானத்துக்கு வந்தார் தோனி. கையில் அந்த ரசிகை ஏந்தியிருந்த போஸ்டரின் வாசகங்களைப் படித்து புன்னகை செய்து அவர் அருகில் சென்றார். அப்போது தான் எந்தளவுக்கு தோனியின் ரசிகையாக உள்ளேன் என்பதை அந்த வயதான ரசிகை விளக்க, ரசித்தபடி கேட்டார் தோனி. பிறகு அவருக்கு ஆட்டோகிராப் வழங்கினார். அவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் விடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த விடியோவைக் கண்ட பலரும் தோனியின் குணத்தைப் பாராட்டியுள்ளார்கள். வயதான ரசிகைக்கு மதிப்பளித்து அவருடன் சிறிது நேரம் செலவழித்த தோனி உயர்ந்த குணம் கொண்டவர் என்று பலரும் தோனியைப் பாராட்டி சமூகவலைத்தளங்களில் எழுதியுள்ளார்கள்.